கணணியை ஒழுங்காக பராமரித்து பாவிக்கும் முறை.

கணினி என்பது பல எலொக்ரொனிக் (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) பொருட்களை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஒரு எலெக்ரொனிக் இயந்திரத்தை, ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு வேலையை வேகமாகவும், துல்லியமாகவும், தன்னிச்சையாகவும் செயற்பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணணி என அழைக்கப் பெறுகின்றது.
இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் மென்பொருள்களை (புறொக்கிறாம்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.


கணினியில் Hard ware இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப்படும் மென்பொருள்கள் (புறொக்கிறாம்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவற்றில்உள்ள சிறு பிழைகளை கணணியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனற்றதாகி விடுகின்றது. கணணியும் அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணணி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணணி  பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு கணனியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (தூசு,புகை, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.

சில இணையத்தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (Soft Ware) உங்கள் கணனியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருட்கள் உங்கள் கணணிக்கு வைரஸ்சுகளை உட்புகுத்தி கணணியை செயலிழக்க செய்கிறது. எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு கருவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபிடித்து அதனைச் செயலிழக்கச் செய்வதற்கான  வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணணிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணணியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்கலாம்.

கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.
கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம் கணணி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (Soft Ware) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.

எப்படிச் செய்வது?:
உங்கள் கணணியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறப்படும்.

அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணணியை ஸ்கேன் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணனியின் ஹாட் டிஸ்க்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now என்பது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.

Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறப்படும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கேன்னிங் உடனே ஆரப்பமாகும். சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணணி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.

இப்போது; கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணணியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணணியை ஸ்கேன் செய்வதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

De-fragment - செய்வதால் ஆவது என்ன?
நாம் ஒரு புறொக்கிறாமை உட்புகுத்தும் போது, அல்லது ஒரு பைலை சேமிக்கும் போது அவை நிரந்தரமாக ஹாட்டிஸ்கில் பதியப்பெறுகின்றது. ஆனால் அவை தொடர்ச்சியாக அல்லது ஒரே ஒழுங்காக உடனடியாக பதியப்பெறுவதில்லை. கணணி நேரத்தை மீதிப்படுத்துவதற்காக வெற்றிடமாக உள்ள இடங்களில் எல்லாம் பதிந்து தொடர்பை வைத்துக் கொள்ளும். நாம் அவற்றைப் பாவிக்க கிளிக் செய்யும் போது அவற்றை நமக்கு பெற்றுத் தருவதற்காக பதிந்த இடங்களில் எல்லாம் அலைந்து திரிந்து அவற்றை எமக்கு எடுத்து வருகின்றது. அதனால் அதற்கு சிரமமும் நேரமும் எடுக்கின்றது. இதனால் கணணி தாமதமாக இயங்குவது போல் தோன்றுகின்றது.

Defragment செய்யும் போது அவை ஒரேசீராக தொடர்ச்சியாக ஒழுங்காக பதியப் பெறுகின்றது. அதனால் திரும்பவும் பாவனைக்கு எடுத்து வரும் போது சிரமப்படாது உடனடியாக இயங்குகின்றது. De-fragment செய்வதற்கு நாம் முன்பு ஸ்கான் செய்ய Check Now என்ற பொத்தானை அழுத்தியது போல் இதற்கு Defragment Now என்ற பொத்தானை அழுத்துதல் வேண்டும். இதுவும் ஹாட் டிஸ்கின் நிலைமையைப் பொறுத்து நேரம் எடுத்துக் கொள்ளும். De-fragment மாதமொருமுறை செய்யவேண்டியதில்லை. சூழ்நிலைக்கேற்றவாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம். சில புதிய ஒப்பறேற்ரிங் சிஸ்டங்களை Analyze செய்து (பரிசோதித்து) தற்போது அவசியமா? என்பதைக் கூறும். (Start–> Program–> Accessories –> System Tools–> Disk De-fragementer சென்றும் C Drive வை De-fragement செய்யலாம்).

Disk Clan up-டிஸ்க்கை சுத்தம் செய்யவதற்கு அதாவது தேவை இல்லாதவற்றை அழித்து இடத்தை சேமிக்க Disk Clan up செய்யப்பெறுகின்றது. உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய Disk Clanup மிகவும் அவசியம். Disk Clanup செய்வதற்கு,முன்பு கூறியது போல் My computer ரை கிளிக் செய்து Proreties க்கு செல்லுதல் வேண்டும். அங்கே Disk Clanup செய்வதற்கான பொத்தான் உள்ளது. இதை கிளிக் செய்ததும் சிறிது நேரத்தில் ஸ்கான் செய்யப்பட்டு ஒரு விண்டோ தோன்றும். அவற்றுள் சில சரி போடப்பெற்றிருக்கும். அவை அனேகமாக கணணிக்கு தேவையற்றவை, நீங்களாக எதையும் கிளிக் செய்து சரி போடாதீர்கள். அவைகள் கணணி இயங்க தேவையானவைகளாக இருக்கலாம். பின்பு OK என்ற பொத்தானை அழுத்துங்கள் கணினி அவற்றை தானாகவே கிளீன் செய்துவிடும். இதன் போது Free ஆக இருந்த இடம் இன்னும் அதிகரித்திருக்கும். (Start–> Program–> Accessories –> System Tools–> Disk Cleanup சென்றும் C Drive-யை Disk Cleaneup செய்யலாம்) அல்லது அதனை கணணி தன்னிச்சையாக செய்வதற்கு கணணி ஓய்வான நேரத்தில் செய்யக்கூடியதாக Schedule செய்து விடலாம். கணணி தானாகவே குறிக்கப்பெற்ற தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து செய்துவிடும்.

வைரஸ் அழிப்பு மென்பொருளை (install) உட்புகுத்தி பாதுகாப்பாக வைத்திருங்கள். எந்த ஒரு கணணியும் வேலை செய்யாமல் போவதற்கு வைரஸ் தாக்கம் முக்கியக் காரணியாகும். எனவே நிபுணர்களின் ஆலோசனைப்படி நல்ல வைரஸ் அழிப்பு மென்பொருட்களை வாங்கி (install) உட்புகுத்துதல் அவசியமாகும். அதன்பின் அதனை உபயோகித்து வைரஸ் ஸ்கேனிங் செய்து வைரஸ் தாக்கம் இருந்தால் அவற்றை அழித்து விடல் வேண்டும். இலவசமாக கிடைக்கும் வைரஸ் அழிப்பு மென்பொருட்களை பாவிப்பதில் அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updates செய்தல்: கணினியில் பதியப்பெற்ற ஒப்பறேற்றிங் சிஸ்ரத்திற்கான Updates அவ்வப்போது உட்புகுத்துங்கள். அல்லது கணணியே அவற்றை தானாகப் பெற்று அவ்வப்போது உட்புகுத்த கணினியை Schedule செய்யுங்கள். அவை கணனிக்கு பாதுகாப்பையும், பல மேலதிக வசதிகளையும் ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கும்.

fபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்:
இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் fபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. (XP) மற்றும் விண்டோஸ் விஸ்ரா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் fபயர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.

இணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவையெல்லாம் கணணியை மந்தமடையச் செதுவிடும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.

அத்துடன், டெஸ்க் ரொப்பில்-Desktop அதிகம் கோப்புகளை வைத்திராதீர்கள். அவற்றை வேறு இடத்திற்கு (My Document) மாற்றி விடுங்கள். இப்படிச் செய்வதனால் கணணி ஆரம்பிக்கும் போது ஏற்படும் தாமதம் நிவர்த்தி செய்யப்பெறும்.

பயன்படுத்தாத புரோகிராம்களை அழித்து விடுங்கள்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கொன்ட்ரோல் பனலில் உள்ள ADD or Remove பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.

கணினியை சுத்தமாக வைத்திருத்தல்:கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் சென்று விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும். கணினியை அடுப்பங்கரைக்கு அண்மையாகவோ, தூசு, புகை அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது வெப்பம் உள்ள இடங்களில் வைத்திருத்தலை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

கணினி வேலை செய்யும் நேரங்களில் அதனை (துணியால்) மூடி வைத்தல் ஆகாது. கணினியின் உள் உறுப்புகள் சூடேறாமல் சீரான வெப்பநிலையையை ஏற்படுத்திக் கொடுக்க அதற்கு ஏற்ற வகையில் அதன் வெளிக் கவர் டிசைன் செய்யப் பெற்று சில காற்றாடிகள் உள்ளே இயங்குகின்றன. நாம் கணணியை மூடிவிட்டால் உள் உறுப்புகள் சூடேறி கணினி வேலை செய்யாது நின்றுவிடும்.

கணினியை எப்பொழுதும் திறக்கப்பெற்ற எல்லா கோப்புகளையும் CLOSE செய்த பின் START மெனு மூலம் நிறுத்துதல் அவசியம். சுவிச்சு மூலம் நிறுத்தினால்  பல பிரச்சனைகளை உருவாக்கும். திரும்ப ஆரம்பிக்கும் போது நீண்ட நேரம் எடுக்கும்.

அடுத்து மின்சார வினியோகம் கூடிக் குறைந்து காணப்படும் பிரதேசங்களில் வசிப்போர் ஸ்திரமான மின்சரத்தை வழங்கும் (Stabilizer) உபகரண மூலம் கணனியின் மின்சாரத் தொடர்பை எற்படுத்தி கணனிக்கு தேவையான மின்சாரத்தை பெற ஒழுங்கு செய்தல் வேண்டும். இல்லையேல் கணனியின் பல பாகங்கள் பழுதடைந்துவிடும்.


சிறுவர்கள் உபயோகிக்கும் கணணி எப்பொழுதும் எல்லோராலும் கவனிக்கக் கூடிய இடத்தில் இருப்பது நல்லது. இதனால் அவர்கள் தகாத இடங்களுக்கு செல்வதை தடுக்கலாம். இன்ரநெற் உள்ள கணணியை சிறுவர்கள் பாவிக்கும் போது பெரியோகள் அவதானமாக இருத்தல் அவசியம்.