அறிமுகப்படுத்திய சித்தார்த்துக்கே வில்லனான சிம்ஹா...!

'ஜிகர்தண்டா' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் படத்தில் நாயகனாக நடித்த சித்தார்த்தை விட வில்லனாக நடித்த சிம்ஹாவுக்குத்தான் பாராட்டுக்கள் அதிகம் குவிகின்றன. முதல் முறையாக ஒரு முழு வில்லனாக படம் முழுவதும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிம்ஹா.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் சிம்ஹாவை, சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதே சித்தார்த் தானாம். இதை அவரே சொல்லியிருக்கிறார். சித்தார்த் அவருடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் நடித்தாராம். அந்தப் படத்தில் சிம்ஹாவை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் சித்தார்த்.

அன்று இரண்டு காட்சிகளில் நடித்தவர், இன்று சித்தார்த்துக்கே வில்லனாக நடித்து வீறு கொண்டு எழுந்திருக்கிறார், இதுதான் சினிமா. அதன் பின் 'பீட்சா, சூது கவ்வும்' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தாலும் சிம்ஹாவை அடையாளம் காட்டியது 'நேரம்' படம்தான். அந்தப் படத்தில் வட்டி வசூல் செய்யும் 'வட்டி ராஜா' கதாபாத்திரத்தில் நடித்து யார் இவர் என புருவம் உயர வைத்தார். இப்போது 'ஜிகர்தண்டா' படம் மூலம் அவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்து விட்டார்.

அடுத்து சிம்ஹா நாயகர்களில் ஒருவராக நடித்துள்ள 'ஆடாம ஜெயிச்சோமடா' படம் வெளிவர உள்ளது. 'உறுமீன்' என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோருக்கு அடுத்து சிறந்த வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிம்ஹா உருவெடுக்கலாம் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அவருக்குத் தொடர்ந்து கதாநாயகனாக நடியுங்கள் என்ற ஆசையை யாரும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.