மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஏ படிக்கிறார் தேவயானி!

சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி. அதையடுத்து சின்னத்திரைக்கும் வந்து கோலங்கள், மஞ்சள் மகிமை, கொடிமுல்லை, முத்தாரம் போன்ற தொடர்களிலும் டைட்டீல் ரோல்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது சகாப்தம், பிளாக் அண்ட் ஒயிட் உள்பட சில படங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் தேவயானி டீச்சர் வேலை பார்ப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதனால் நடிப்புக்கு தேவயானி முழுக்குப்போட்டு விட்டதாக கோடம்பாக்கத்தில் செய்தி பரவியுள்ளது. அதனால் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதைப்பற்றி அறிய தேவயானியை நேற்று தொடர்பு கொண்டபோது, அவர் இன்றுதான், மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஏ படிப்பதற்கான அப்ளிகேஷன் வாங்க சென்றிருக்கிறார் என்று அவரது கணவரும், டைரக்டருமான ராஜகுமாரன் தெரிவித்தார்.

அதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, தேவயானிக்கு ஆசிரியர் வேலை மீது அதிக ஈடுபாடு உண்டு. அதனால்தான், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் வேலைக்கு சென்றார். ஆனால் அது நிரந்தர வேலையில்லை. ஒரு ஆசிரியைக்கு உடலநிலை சரியில்லாமல் லீவு போட்டிருந்ததால் அந்த லீவு நாட்களில் மட்டும் தேவயானி டீச்சராக பணியாற்றினார். அதற்காக அவர் 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றார். மேலும், இதைத் தொடர்ந்து, அவருக்கு மேலும் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டிருப்பதால், தற்போது ஓபன் யுனிவர்சிட்டி மூலம் பிஏ படிப்பதற்காக மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் அப்ளிகேஷன் வாங்கியுள்ளார்.
இப்படி திடீரென தேவயானி படிப்பில் கவனம் செலுத்துவதற்கு காரணம், அவர் எதிர்பார்க்கிற மாதிரியான வேடங்கள் கிடைக்கவில்லை. எல்லாமே ஏற்கனவே நடித்தது போன்ற ஒரே மாதிரியான கதைகளாக வந்ததால்தான் நடிப்பில் அவருக்கான ஈடுபாடு குறைந்தது. ஆனால் வித்தியாசமான வேடங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பார். இப்போதுகூட சில படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்றார் ராஜகுமாரன். ஆக, தனது 41வது வயதில் கல்லூரிமாணவியாகியிருக்கிறார் தேவயானி.