கத்தி தெலுங்கிலும் டப் ஆகிறது...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் மீண்டும் நடிக்கும் படம் கத்தி. விஜய் இதற்கு முன் நடித்து வெளிவந்த ஜில்லா, தலைவா ஆகிய படங்களுக்குப் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், துப்பாக்கி படத்தைப் போன்று மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைத் தரவேண்டும் என்று விஜய் நினைத்து வருகிறாராம்.

 தற்போது ரசிகர்கள் வழக்கமான மசாலாப் படங்களை ரசிப்பதில்லை, வித்தியாசமான படங்களையே ரசிக்கிறார்கள் என்ற நோக்கத்தில்தான் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்களாம். சில நாட்களுக்கு முன் முடிவடைந்த பாடல் காட்சியுடன் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாம். விஜய் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் இது.பொதுவாக, விஜய் நடிக்கும் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டாலும் பெரிய வெற்றியை அங்கு பெற்றதில்லை. இன்றைய ஹீரோக்களில் தெலுங்குத் திரையுலகில் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போல வேறு எந்த தமிழ் ஹீரோக்கும் அவர்கள் அளவிற்கு வரவேற்பு இல்லை என்கிறார்கள். இருந்தாலும் இயக்குனர்களைப் பொறுத்து மற்ற ஹீரோக்களின் படங்கள் டப்பிங் செய்யப்பட்டு நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. ஷங்கர் இயக்கியுள்ள ஐ படம் 30 கோடிக்கு மேல் டப்பிங் உரிமை விற்கப்பட்டுள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள கத்தி படத்தின் டப்பிங் உரிமையும் விற்கப்பட்டுவிட்டதாம். ஆனால், ஐ படத்தின் விலையில் மூன்றில் ஒரு பங்கு கூட கத்தி படத்தின் டப்பிங் விலை இல்லை என்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகில் சமீப காலமாக டப்பிங் படங்களின் வருகை மிகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கவலைப்படுவதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.