அழகிற்கு தேங்காயின் முக்கியத்துவம்.

நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.

* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

• கேரட் சாறு - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும்.

• முல்தானிமட்டி - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்துக்கு "பேக்" போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த "பேக்" போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.

• உருளைக்கிழங்கு ஜூஸ் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்
பயத்த மாவு - 1 டீஸ்பூன்

மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு "பேக்" போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த "பேக்" போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

• மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள். பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.

பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (சியக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.

கேரள பெண்கள் ஏன் கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார்கள் என்பதற்கான காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே