பாண்(பிரட்) சாப்பிடுவதில் உள்ள தீமைகள்.

பிரட்டில் அதிகளவில் சோடியம் இருப்பதால், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புண்டு. அதிலும் பிரட்டை தினசரி காலை உணவாக சாப்பிடும் ஒருவரது உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக பிரட்டை கொண்டு சாண்ட்விச், பர்கர் அல்லது ஹாட் டாக் போன்றவைகளை செய்து சாப்பிடுவதன் மூலம், பல்வேறுபட்ட இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும்.

பிரட்டை எந்த வகையில் தயார் செய்து சாப்பிட்டாலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது.அதுமட்டுமின்றி வாய்க்கு சுவையாக வயிறு நிறைய சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான புரதங்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்க்கின்றோமா?
என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் பிரட் சாப்பிடுவதால் புரதங்கள், வைட்டமின்கள் ஒரு நூல் அளவு கூட கிடைப்பதில்லை. வேண்டுமெனில் கோதுமை பிரட், முழுதானிய பிரட் போன்றவற்றில் சிறிதளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.

பிரட்டில் மிகக் குறைந்த அளவில் கலோரி இருந்த போதிலும், இதை தினசரி காலையில் சாப்பிடுவதால், உட்கொள்ளும் கலோரியின் அளவு அதிகமாகும். அதிலும் பர்கர் அல்லது கேக் செய்து சாப்பிடும் போது, அதிகளவில் உப்பும், சர்க்கரையும் உடலில் சேர்வதால், உடல் எடை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

ஒயிட் பிரட் சாப்பிடுவதா? ப்ரவுன் பிரட் சாப்பிடுவதா? என்று பார்க்கும் போது, ஒயிட் பிரட் சுவையாக இருப்பதால், அதிகமானோர் ஒயிட் பிரட்டையே விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதை எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதாலும், ஏனைய ஊட்டச்சத்துகள் இல்லாத காரணத்தினாலும் பசி அடங்குவதில்லை.

பிரட்டில் உள்ள க்ளுட்டன் என்னும் பொருள் நிறைய நோய்களை ஏற்படுத்துகிறது. பலருக்கு பிரட் சாப்பிட்ட பின்னர் வயிறு உப்புசம் ஏற்படுவது, உடற்குழி நோய்க்கான அறிகுறியாகும். இது எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால் இவ்வாறு ஒவ்வாமை நிலை ஏற்படுவோர், தமது உணவுப் பழக்கத்திலிருந்து பிரட்டை விலக்கி விட வேண்டும்.

பிரட்டை கொண்டு தயார் செய்யப்படும் பல உணவுப் பண்டங்களில் கார்போஹைட்ரேட் அதிகளவில் காணப்படும். பொதுவாக குறைந்தளவு கார்போஹைட்ரேட் உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும். அதுவே அளவுக்கு அதிகமாக சேர்த்தால், அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். குறிப்பாக கார்போஹைட்ரேட் அளவுக்கு அதிகமானால் ‘ப்ரைன் ஃபாக்' (brain fog) நோயை உண்டாக்கும். அதாவது மூளையின் அறிவாற்றல் சக்தியை குறைக்கும். அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதால், குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் சீரற்ற நிலையை உருவாக்குவதால், நீரிழிவு நோய், மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.