கிளீன் இந்தியா - மோடி அழைப்பு - கமல் ஏற்பு! 90 லட்சம் பேரை இணைக்க திட்டம்!!

கிளீன் இந்தியா திட்டத்தில், கமலும் பங்கேற்க வேண்டும் என மோடி விடுத்த அழைப்பை கமல் ஏற்றுக்கொண்டுள்ளார், மேலும் இதில் 90 லட்சம் பேரை இணைக்க எண்ணுவதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காந்தி ஜெயந்தி அன்று, சுத்தமான இந்தியாவை உருவாக்க, கிளீன் இந்தியா எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், ப்ரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்டோரும் பங்கேற்க வேண்டும் என்று கூறினார். மோடியின் அழைப்பை ஒவ்வொருவராக ஏற்று வருகின்றனர்.
ப்ரியங்கா சோப்ரா, சச்சின் ஆகியோர் நேற்றே இதற்கு சம்மதம் சொல்லிவிட்டனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் இதில் தன்னை இணைத்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது...

பெரும் பாக்கியமாக கருதுகிறேன்

கிளீன் இந்தியா திட்டத்தில், பிரதமர் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒன்பது பேர்களில் எனது பெயரும் இடம்பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கட்சிகளுக்கு, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, மனித சேவை என்பதில் என்றுமே நம்பிக்கை உடையவன் நான். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அரிய ஒன்பது பேர்களில், நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை உடையவர்கள். நான் மனித நேயத்தை ஆத்திகம் மூலமாகவே, சித்தாந்தங்கள் மூலமாகவே அணுகாமல் மனித நேயம் மூலமாக அணுகி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன். இதை எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் புதிய கடமையாக நினைக்காமல், எனக்கு கிடைத்த பாராட்டாக நினைத்து செயல்படுவேன் என பிரதமருக்கு தெரிவித்து கொள்கிறேன்.


90 லட்சம் பேரை இணைப்பேன்

கடந்த 30 ஆண்டுகளாக எனது சினிமா ரசிகர்களாக இருந்தவர்களை சமுதாய ஆர்வலர்களாக, சேவையாளர்களாக மாற்ற நானே ஒரு சிறிய உந்துதலாக இருந்திருக்கிறேன். அந்த பணி இனியும் தொடரும். சுற்றமான சூழல் என்பதை நான் உணர ஆரம்பித்து, பேச ஆரம்பித்து பல மாமாங்கங்கள் கடந்து விட்டன. இந்தப் பணியும் தொடரும். பிரதமர் தான் தேர்ந்தெடுத்த ஒன்பது பேர், இன்னும் ஒன்பது பேரை இந்தச் சேவைக்காக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார். முடிந்தால் இன்னும் 90 லட்சம்பேரை சேர்க்க வேண்டியது என்னுடைய கடமையாக நான் நினைக்கிறேன்.

சிறுதுளியில் பெருவெள்ளத்தின் முதல் துளி

ஒரு பில்லியன் ஜனத்தொகை உள்ள இந்த நாட்டில் என் தொழில் சிறு துளியாக இருந்தாலும், பெரு வெள்ளத்தின் முதல் துளியாக இது இருக்குமென்றும் நம்புகிறேன். இந்த முயற்சியில் அரசியல், மத, இன, மொழி கடந்த மனிதம் நிச்சயம் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.