சுந்தர்.சி இயக்கத்தில், 'ஆம்பள' படத்தில் நடிக்கிறாரா குஷ்பூ?

சுந்தர்.சி. இயக்கிய அரண்மனை கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு வெளியான படங்கள் எல்லாம் தியேட்டரைவிட்டு ஓடிய பிறகும், அரண்மனை படம் இன்னமும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அரண்மனை படத்தைத் தொடர்ந்து தற்போது ஆம்பள என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. ஹீரோ விஷால்.

ஹரி இயக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, தற்போது ஆம்பள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களின் மகள்களாக ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது ஆம்பள படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பல வருடங்களுக்கு முன் உள்ளத்தை அள்ளித்தா படத்தை ஊட்டியில்தான் எடுத்தார் சுந்தர்.சி. தற்போது ஆம்பள படத்தையும் ஊட்டியில் அதே லொகேஷன்களில் படமாக்கி வருகிறார். இதற்கிடையில் ஆம்பள படத்தில் கெஸ்ட்ரோலில் குஷ்பூ நடிக்க இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. தற்போது நடிப்புக்கும் அரசியலுக்கும் முழுக்கும் போட்டுவிட்டதால் ஃப்ரீயாக இருக்கும் குஷ்பூ, தன் கணவர் சுந்தர்.சியுடன் நேரம் செலவழிப்பதற்காக ஊட்டிக்கு சென்றிருக்கிறார். அதை வைத்துதான் ஆம்பள படத்தில் குஷ்பூவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்தி அடிபடுகிறது. இதை குஷ்பூவோ சுந்தர்.சியோ உறுதிப்படுத்தவில்லை.

ஆம்பள படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார் சுந்தர்.சி.