ஐ பட விழாவுக்காக சென்னை வந்தார் அர்னால்டு!

விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக சென்னை வந்தார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, அவருக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரமாண்ட் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், விக்ரமின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

இப்படத்தை தயாரிக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ், ஐ படத்தின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டது, அதன்படி தசாவதாரம் படத்திற்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானை அழைத்தது போன்று ஐ படத்திற்கு அர்னால்டை அழைக்க எண்ணியிருந்தார்.

இதுதொடர்பாக அவரை சந்தித்து ஐ படத்தின் சில காட்சிகளை காண்பித்து விழாவுக்கு வரும்படி அழைத்தார். அர்னால்டு, ஐ படத்தை பார்த்தும், விக்ரமின் நடிப்பை பார்த்தும் ஆச்சர்யப்பட்டு விழாவுக்கு வருவதாக சம்மதம் சொன்னார். இதனையடுத்து விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந்நிலையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 15ம் தேதி) ஐ படத்தின் ஆடியோ விழா பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தார் அர்னால்டு. சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். பின்னர் படத்தின் தயாரிப்பாளர்கள் அர்னால்டை அழைத்து சென்றனர்.
முதல்வரை சந்திக்கிறார்
சென்னை வந்திருக்கும் அர்னால்டு, ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று மதியம் 2.45 மணியளவில் சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இருக்கிறார்.