'வேற மாதிரி பேசி' சிக்கிய விஜய்...!

நெல்லையில் இரு நாட்களுக்கு முன் நடந்த 'கத்தி' படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் விஜய் பேசும் போது, “நம்மள வெட்ட வர்ற எதிரி கிட்ட நாம வெள்ளைக் கொடி காட்டிட்டு நிக்க முடியாது இல்லையா, அவனோட போக்குலயே விட்டுடணும். சாஃப்ட்டா பேசினால் சாஃப்ட்டா பேசணும், வேற மாதிரி பேசினால் நாமளும் வேற மாதிரி பேசணும்,” சினிமாவில் பேசும் பன்ச் வசனம் போலவே பேசி அவருடைய ரசிகர்களிடையே பலத்த கைத்தட்டல்களை வாங்கினார்.

அஜித் ரசிகர்களைப் பற்றித்தான் அவர் அப்படிப் பேசினார் என்பதைப் புரிந்து கொண்ட அஜித் ரசிகர்கள் நேற்று முழுவதும் “வேற மாதிரி விஜய்”, “வேற மாதிரி மீமீ” என விஜய்யை பயங்கரமாகக் கிண்டலடித்து அந்த வார்த்தைகளை டிவிட்டர் டிரெண்டிங்கில் கொண்டு வந்து விட்டனர்.


நேற்று ஒரே நாளிலேயே நூற்றுக்கணக்கான விதவிதமான மீமீக்களை உருவாக்கிய விஜய் ரசிகர்கள் அவற்றை சமூக வலைத்தளங்களில் உலவ விட்டனர். அவற்றிற்கு பயங்கரமான வரவேற்பும் கிடைத்துள்ளது. விஜய் என்ன பேசினாலும் அதற்கு பதிலடி கொடுக்க அஜித் ரசிகர்கள் தயாராக இருக்க, அதற்கு பதிலளிக்க விஜய் ரசிகர்கள் திணறி வருகிறார்கள். 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே மிகப் பெரிய சாதனையை படைத்ததால் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கண்டபடி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

நெல்லையில் 'வேற மாதிரி பேசிய' விஜய்யின் பேச்சு அஜித்தின் ரசிகர்களுக்கு திருநெல்வேலி 'அல்வா'வை விட சிறப்பாக அமைந்துவிட்டது. டிவிட்டரில் போய் 'VeraMadhiriVijay' என நீங்கள் தேடினால் அந்த கிண்டலான மீமீக்களைப் பார்த்து ரசிக்கலாம்...