அஜீத்துக்காக காத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

தீனா, ரமணா, கஜினி ஆகியவை ஏ.ஆர்.முருகதாஸின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்கள். இதில் தீனாவில் அஜீத் நடித்திருந்தார். அதையடுத்து, விஜயகாந்த் ரமணாவில் நடித்தார். அந்த படத்திற்கான கதையை விஜயகாந்திடம் சொல்லும்போதே இந்தந்த காட்சிகளுக்கு தியேட்டரில் ஆடியன்ஸ் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் என்று அவர் சொன்னது பின்னர் அப்படியே நடந்திருக்கிறது. அதையடுத்து, ரமணா படத்தை தெலுங்கில் ஸ்டாலின் என்ற பெயரில் சிரஞ்சீவியை வைத்து இயக்கினார்.

கஜினியை இந்தியில் அமீர்கானை வைதது இயக்கினார். ஆக மூன்று படங்களிலேயே இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராகி விட்டார் முருகதாஸ். அதன்பிறகு ஏழாம் அறிவு, துப்பாக்கி, இப்போது கத்தி என மெகா படங்களாக மெகா ஹீரோக்களை வைத்து இதுவரை இயக்கியிருக்கிறார். இந்தநிலையில், ஒரு மேடையில் கமல் எதிரிலேயே அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தனது முதல் பட நாயகனான அஜீத்தை வைத்து மீண்டும் படம் பண்ணவும் தான் ஆர்வத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளர்.
மேலும், நான் உதவி இயக்குனராக இருந்தபோது ரொம்ப சின்ன பையனாக இருப்பேன். அப்போது நான் சொல்லும் கதைகள் சிறப்பாக இருந்தாலும என்னை நம்பி படம் தர தயங்குவார்கள். ஆனால், அஜீத் சார் என்னை நம்பி தீனா படத்தில் நடித்தார். அப்படி அவர் அந்த படத்தில் நடித்ததினால்தான் படமும் பேசப்பட்டது. இருப்பினும் அதையடுத்து நான் வெவ்வேறு நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகிறேன். ஆனால் அஜீத்துடன் இணைவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. இருப்பினும் அவர் எப்போது அழைத்தாலும் அவரை வைத்து படம் பண்ண நான் ரெடியாகவே இருக்கிறேன். அவருக்கான கதையும் என்னிடம் ரெடியாக உள்ளது என்று தற்போது தெரிவித்திருக்கிறார் முருகதாஸ்.