அலர்ஜி வராமல் தடுக்கும் முறை.

அலர்ஜி என்கிற ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உணவு பொருட்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றில் இருந்து ஓதுங்கியிருந்தால் அலர்ஜி பிரச்சினையே இல்லை. பொதுவாக அலர்ஜியை சில அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம்.

உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படுவதும் கூட அலர்ஜியாக இருக்கலாம். மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தியும் ஏற்படும். அதோடு, அடிவயிற்று வலி வரலாம்.

மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு நினைவு இழப்பும் ஏற்படுவது உண்டு. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.

அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் ஏற்படுத்தக் கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்கிறது.

இதுதவிர, முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.சிலஉணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். அலர்ஜி வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

அலர்ஜியை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான். வெளியில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக்காமல் மேல்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

சாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம். மேலும், பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலத்தை கட்டிப் பயன்படுத்தக்கூடாது.அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.