இயற்கையான வலி நிவாரணிகள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்', இந்த பழமொழி அனைவரின் வாழ்விலும் மெய்ப்பிக்க வேண்டும் என்று வேண்டாதோர் யாரும் இல்லை. அந்த அளவிற்கு நோயின் பிடியில் நாம் சிக்கி தவித்து வருகிறோம். உடம்பு சரியில்லைன்னா, உடனே மெடிக்கல் ஷாப்புக்கு போகாதீங்க.

சமையலறைக்கு போங்கள். இன்றைய காலத்தில் மருந்து மாத்திரைகள் அதிகம் மார்க்கெட்டில் வந்துள்ளன. உடலில் எந்த ஒரு சிறிய பிரச்சினை என்றாலும், உடனே மருந்து கடைக்குச் சென்று, மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும்.
ஆனால் அவ்வாறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளை நாடினால், அது உடலுக்கு பிற்காலத்தில் வேறு சில பிரச்சினைகளை உண்டாக்கி விடும். இதை வாசிப்போர் “தலை வலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்று ஒரு பழமொழியை கூறலாம்.
ஆனால் இப்படி போட்டால், அது பழக்கமாகி விடுவதோடு, அந்த பழக்கம் ஒரு அடிமை போன்று ஆக்கி விடும். அதிலும் பெண்கள் வலி நிவாரணி மாத்திரை போட்டால், பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது பிரச்சினையை ஏற்படுத்தும்.
ஆகவே எந்த ஒரு வலியானலும் முதலில் மாத்திரைகள் போடுவதை தவிர்த்து, அதற்கு இயற்கை வலி நிவாரணிகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் நமது சமையலறையில் நிறைய வலி நிவாரணிகள் இருக்கின்றன.

அவை தற்காலிகமாக மட்டும் வலியை குறைப்பதில்லை, வாழ்நாள் முழுவதும் தான். மேலும் இவை வலியை குறைப்பதோடு, உடலுக்கு பல நன்மைகளையும் இலவசமாக கொடுக்கின்றன. இப்போது சமையலறையில் இருக்கும் இயற்கை வலி நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமானால்,

இஞ்சி......... உடல் தசைகள் வலியுடன் இருந்தால், சிறிது இஞ்சியை அப்படியே கடித்து சாப்பிட்டால், வலி நீங்குவதோடு, மூட்டுகளில் இருக்கும் வீக்கங்கள் நீங்கி, உடல் வலிமையோடு இருக்கும்.
கிராம்பு....... பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது உடனே கிராம்பை மென் றாலே, பல் வலி போவதோடு, ஈறுகளில் இருக்கும் காயங்களும் குணமாகும். எப்படியெனில் இதில் யூஜினால் என்னும் வலியை போக்கும் மருந்து பொருள் உள்ளது.
பூண்டு......... சிலருக்கு அதிகப்படியான சளியால், காதுகளில் வலி உண்டாகும். அத்த கையவர்கள் தேங்காய் எண்ணெயில் சிறிது பூண்டு சேர்த்து கொதிக்க விட்டு, ஓரளவு வெப்பத்துடன் காதுகளில் ஊற்றினால், பூண்டில் உள்ள செலினியம் மற்றும் சல்பர், காதுகளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, காயங்களை குணப்படுத்தும்.

உப்பு....... `உப்பிட்டவரை உள்ளவும் நினை' என்று கூறுவார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. காரணம் அந்த உப்பில் ருசி மட்டும் தென்படுவதில்லை. ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. தொண்டை வலியால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள்.

அத்தகையவர்கள் தொண்டை வலியை குணப்படுத்த, வெது வெதுப்பான நீரில், உப்பு சேர்த்து தொண்டையில் சிறிது நேரம் வைத்து கொப்பளித்து வந்தால், தொண்டையில் ஏதேனும் நோய்க்கிருமிகள் இருந்தால் போய்விடும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது பூண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ்........ எங்கோ தூரத்தில் இருந்து வந்த ஓட்ஸ் என்னும் உணவு பொருள் இன்று பெருவாரியான வீடுகளின் சமையல் அறைகளில் மேலானதாக உள்ளதை காண முடிகிறது. உடல் எடையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக இது திகழ்வதால் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம். அது மட்டுமின்றி மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு ஓட்ஸ் சிறந்த நிவாரணியாக இருக்கும். ஏனென்றால், அதில் வலியைப் போக்கும் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது.

ப்ளூபெர்ரி....... சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்றினால் உண்டாகும் வலிக்கு ப்ளூபெர்ரி சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட், பெருங்குடல் மற்றும் சிறுநீரகப் பாதையில் உள்ள நோய்க் கிருமிகளை அழித்து, வலியைக் குறைக்கும். எனவே இதனை தினமும் சாப்பிடுவது சிறுநீரக பாதைக்கு ஆரோக்கியமானது.
அன்னாசி........... செரிமானப் பிரச்சினையால் வயிற்று வலி ஏற்படுபவர்களுக்கு, அன்னாசி ஒரு சிறந்த பழம். ஏனெனில் இதில் உள்ள புரோடியோலிடிக் நொதிகள், செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைத்து, வலியைக் குறைக்கும்.
மிளகுக்கீரை........... கீரை என்றாலே நமது நலத்திற்கு வித்திடும் முக்கிய வகையாகவே அன்று முதல் இன்று வரை கருதப்பட்டு வருகிறது. உடல் வலிக்கு மிளகுக்கீரை நல்ல நிவாரணத்தை தரும். அதற்கு வெது வெதுப்பான குளிக்கும் நீரில், 10 துளிகள் மிளகுக் கீரை எண்ணெயை ஊற்றி குளித்தால், நரம்புகள் புத்துணர்ச்சியடைவதோடு, உடல் வலியும் நீங்கிவிடும்.

மஞ்சள் தூள்............. மஞ்சள் என்பது மங்கள கரமான பொருள் மட்டுமல்ல. அது ஒரு சகலரோக நிவாரணியாகவும் இருந்து வருகிறது. மூட்டுவலியால் அவஸ்தைப்படுபவர்கள், உணவில் மஞ்சள் தூளை சேர்த்து வந்தால், அதில் உள்ள குர்குமின் என்னும் பொருள், வலியை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை முற்றிலும் தடுத்துவிடும்.அல்லது ஒரு கரண்டியில் மஞ்சள் தூளையும் உப்பு தண்ணீரையும் கலந்து கொஞ்சம் தீயில் பிடித்து சூடாக்கி வலி அல்லது வீக்கங்களின் மேல் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

யூகலிப்டஸ் ஆயில்............. தலைவலி வந்தால், அப்போது யூகலிப்டஸ் ஆயிலை தடவினால், தலைவலி குறைந்து விடும். யூகலிப்டஸ் ஆயிலில் நோய் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது தலைவலியை மட்டுமின்றி, தசை வலி, சுளுக்கு மற்றும் நரம்பு அழுத்தங்களையும் போக்கும்.

ஆக மொத்தத்தில் நமது சமையலறையிலே இத்தனை வகையான விளைவுகள் இல்லாத மருத்துவ குணம் கொண்ட பொருட்களை வைத்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் மாத்திரை மருந்துகளை உட்கொள்வது,அடிக்கடி மருத்துவ ஆலோசனை இன்றி மருந்துகளை உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து விடுவதோடு, கடுமையான பக்க விளைவுகளுக்கும் நம்மை கொண்டு போய் விடும். நோயின் தன்மையினை அறிந்து மருந்து உட்கொள்வோம், நோயின்றி வாழ்வோம்.