தனுசை வைத்து 100 படங்களை இயக்குவாராம் கே.வி.ஆனந்த்!

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த், தற்போது தனுசை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் அனேகன். மரியான் படத்திற்கு பிறகு இந்த படத்தில்தான் தனுஷ் முழுசாக நடிக்கயிருந்தார்.
ஆனால் இடையினில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி படத்தை முடிக்க வேண்டியிருந்ததால் அனேகன் தாமதமானது.
அதையடுத்து இந்தியில் தனுஷ் நடிக்கும் ஷமிதாப் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் சூதாடி ஆகிய பட வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பல படங்களில் தனுஷின் கவனம் சிதறியிருந்ததால் அனேகன் திட்டமிட்டதை விட பல மாதங்கள் அதிகமாகி விட்டது. இருப்பினும் இப்போது மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு பூசணிக்காய் உடைத்து விட்டனர்.

பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு முடிகிற கடைசி நேரத்தில் இயக்குனர், ஹீரோவுக்கிடையே ஏதாவது ஒரு காரணத்துக்காக மோதல் வெடிக்கும். அதனால் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டு செல்வார்கள்.ஆனால். இந்த அனேகன் படத்தைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கே.வி.ஆனந்தும், தனுசும், இவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்து விட்டதே என்று பீல் பண்ணும் அளவுக்கு தங்களது டுவிட்டரில் பாசமழை பொழிந்துள்ளனர்.
அதாவது தனுஷ் தனது டுவிட்டரில் கூறுகையில், எத்தனையோ டைரக்டர்களுடன் வேலை செய்துள்ள எனக்கு கே.வி.ஆனந்துடன் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். அவருடன் மீண்டும் மீண்டும் வேலை செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில், தனுஷ் ஒரு சிறந்த நடிகர். என்னிடம் மட்டும் அவருக்கேற்ற கதைகள் தொடர்ந்து அமைந்தால் அவரை வைத்து 100 படங்கள் வரை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.