மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.?!

ராணா படத்தின் பூஜை அன்று இரவே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, அதையடுத்து இரண்டறை ஆண்டுகளாக நடிக்கவில்லை. அதனால், இரவு பகலாக 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த ரஜினி, வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து போரடித்து காணப்பட்டார். அவரது பொழுது போக்கிற்காக வீட்டிற்குள்ளேயே ஒரு தியேட்டர் ரெடி பண்ணி வெளியாகிற படங்களையெல்லாம் அவருக்கு போட்டு காட்டி வந்தனர்.

இந்த நேரத்தில்தான், பல வருடங்கள் இடைவெளி விழுந்தால் ரஜினியின் மார்க்கெட் போய் விடும் என்பதால், அவரை சினிமாவில் இருந்து கொண்டேயிருப்பது போன்று காண்பிக்க கோச்சடையான் அனிமேஷன் படத்தை எடுத்தார் அவரது இளைய மகள் செளந்தர்யா. அதையடுத்து, லிங்காவில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில், லிங்காவை முடித்ததும் எந்திரன்-2வில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கயிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நேரத்தில் 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள தனது மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒரு படத்தில் அடுத்து ரஜினி நடிக்கயிருப்பதாக தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது.

தற்போதைய ரஜினி படங்கள் எல்லாமே பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருவதால், இந்த படத்திலும் கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையாளராக பணியாற்றவிருக்கிறாராம். எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி படங்களை தயாரித்த தனுஷ், தனது வொண்டர்பார் நிறுவனம் சார்பில் அந்த படத்தை தயாரிக்கலாம் என தெரிகிறது.