லிங்கா விநியோகஸ்தர்கள் இன்று உண்ணாவிரதம்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா படங்களை அடுத்து ரஜினிகாந்த் நடித்த படம் லிங்கா. ரஜினி நடிப்பில் சில ஆண்டு இடைவேளைக்குப்பிறகு இப்படம் வெளியானதால் எதிர்பார்ப்புகள் பலமாக இருந்தது. அதோடு கோச்சடையானில் அனிமேஷன் ரஜினியை பார்த்த ரசிகர்கள், நேரடி ரஜினியைபார்க்கும் ஆவலில் வரவேற்றனர்.

ஆனால், ஆரம்பத்தில் தியேட்டர்களுக்கு ரசிகர் கூட்டம் படையெடுத்த நிலையில், சீக்கிரமே வெறிச்சோடின. இதனால் அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தங்களுக்கு போட்ட பணம் கைக்கு வரவில்லை. அதிக நஷ்டமாகிவிட்டது என்று பல ஏரியாக்களில் இருந்தும் ரஜினிதரப்பை தொடர்பு கொண்டு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.


அதையடுத்து, படம் யாருக்கும் நஷ்டம் கொடுக்கவில்லை. இன்னும் தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது என்று லிங்கா பட நிறுவனத்திடமிருந்து கூறப்பட்டு வந்தது.  அதோடு, சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில், தஞ்சையை சேர்ந்த விநியோகஸ்தர்கள் ரூ. 20 கோடி வரை லிங்கா படம் தங்களுக்கு நஷ்டத்தை கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், நஷ்டஈடு குறித்து, லிங்கா பட நிறுவனமோ, ரஜினிதரப்போ இதுவரை எந்த பதிலும் சொல்லாததால், இன்று ஜனவரி 10ந்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில் லிங்கா விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றனர்.