பெண்கள் விரும்பி அணியும் கொலுசு.

அணிகலன்கள் அணிவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு. கொலுசு அணிவதில் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனி. கொலுசுக்கு இந்தியாவில் வரலாற்று பாரம்பரியமும், பின்னணியும் உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

வெள்ளியால் நகை ஒவ்வாமை பிரச்சனை ஏற்படாது. பழங்காலத்தில் பெண்கள் சிலம்பு, காப்பு, தண்டை, போன்ற தடிமனான காப்பு போன்ற கொலுசுக்களை அணிந்து வந்தனர். இந்தியாவில் குழந்தைகளக்கு கொலுசு அணிவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
குழந்தையின் அசைவுகளை உறங்கும் போதும், விழித்து இருக்கும் போதும் கொலுசு ஒலி, தாய்க்கு அறிவிக்கும். அந்த காலத்தில் இளவயது பெண்கள் கொலுசு அணிய மாட்டார்கள். திருமணமான பெண்கள் மட்டுமே அணிந்து வந்துள்ளனர்.

தங்களுக்கு திருமண செய்தியை கால் கொலுசு சத்தம் மூலம் பிறருக்கு தெரிவிப்பதாக அறியப்பட்டு வந்தது. திருமண சடங்குகளில் மணப்பெண் கொலுசு அணிவது ஒரு முக்கிய மரபு. சின்ன சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல்வேலைப்பாடுகள் கொண்ட கொலுசுகள் பழைய மாடலாகிவிட்டன.

தற்போது கொலுசுகள் எளிமையான வேலைப்பாடுகளுடன் மெல்லிய சங்கிலி போல வடிவடைக்கப்படுகின்றன.  மெட்டியையும், கொலுசையும் இணைத்து ஒரு வடிவம் கொடுத்துள்ளார்கள். முன்பு கொலுசுகள் புடவையுடன் அணியப்பட்டு வந்தன. தற்போது நவீன உடைகளுக்கு ஏற்ப நவீன பாணி கொலுசுகளை அணிகிறார்கள்.

ஒரே காலில் சில பெண்கள் 2 விதமான கொலுசுகளை அணிகிறார்கள். தங்கள், வெள்ளி கொலுசுகள் மட்டுமல்லாமல் தோல், பிளாஸ்டிக், நைலான், சாதாரண நூல் என பலவகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கொலுசுகளையும் பெண்கள் அணிகிறார்கள்.

தங்கம், வெள்ளியில் செய்யப்படும் கொலுசுகள், சின்ன சின்ன முத்துக்கள் சேர்க்கப்பட்டு மெல்லிய சங்கிலியால் இணைக்கப்பட்டு இருக்கும். செயற்கை கற்கள், குந்தன் கற்கள், சூறை மணிக்கற்கள் (செமிபிரிசியஸ்) பதித்து செய்யப்படும் தண்டைகள், பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.