அமலாவை கிண்டல் செய்த ரஜினிகாந்த்!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகை அமலாவை சினிமாவில் அறிமுகம் செய்தவர் டி.ராஜேந்தர். அவரது மைதிலி என்னை காதலிதான் அமலாவுக்கு முதல் படம்.

அந்த படத்திலேயே தனது கண் அசைவுகளால், அற்புத நடனத்தால் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட அமலா அதையடுத்து மோகன் நடித்த மெல்லத்திறந்தது கதவு படத்தில் நடித்தார். அந்த படமும சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து கோலிவுட்டின் முக்கிய நடிகையாகி விட்டார் அமலா.

ரஜினியுடன் வேலைக்காரன், கொடி பறக்குது, மாப்பிள்ளை, கமலுடன் பேசும் படம், சத்யா, வெற்றி விழா என ஹிட் படங்களாக நடித்தபோது அவர் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. அதோடு, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் அப்போதில் இருந்தே விலங்குகளிடம் அன்பு காட்டி வந்தாராம் அமலா.


அந்த சமயத்தில், அவர் நடித்துக் கொண்டிருந்த வேதம் புதிது படப்பிடிப்பு தளத்துக்கு ஒருநாள் சென்ற ரஜினி, அமலா விலங்குகள் மீது காட்டி வரும் பாசத்தை கிண்டலாக பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது நீங்களும் ஒரு காலத்தில் மனிதநேயம் கொண்டவர்களாக மாறுவீர்கள் என்று ரஜினியைப் பார்த்து சிரித்தபடியே சொன்னாராம், அமலா.

ஆனால் இப்போது 22 வருடங்களுக்குப் பிறகு ஒரு டிவித்தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் அமலா, தனது கடந்த காலத்தை புரட்டிப்பார்த்து, நான் சொன்னது போலவே ரஜினி, இப்போது மனிதநேயம் மிக்க மனிதராக மாறி விட்டார். நான் அன்றைக்கு அவரைப்பார்த்து சொன்னது இப்போது நடந்துள்ளது. மனிதர்களின் மனநிலையை காலமும், சூழ்நிலைகளும்தான் தீர்மானிக்கின்றன என்று கூறியுள்ளார்.