நாகேஷ் பேரன் நடிக்கும் கல்கண்டு!

மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவும் 75 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது ஆனந்த்பாபுவின் மகனும், அதாவது நாகேஷின் பேரன் கஜேசும் ஹீரோவாகி விட்டார். நந்தகுமார் இயக்கும் கல்கண்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எந்த விளம்பரமும், ஆர்ப்பாட்ட அறிமுகமும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் மகனின் அறிமுக விழாவையும் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார் ஆனந்த்பாபு. நாகேஷை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தரே கஜேசையும் அறிமுகப்படுத்த இருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நந்தகுமார் கூறியதாவது: இது ரொமாண்டிக் காதல் கதை. இந்த கதையில் நாகேஷின் இளைமைக்கால தோற்றமும் சுறுசுறுப்பும் காமெடியும் கலந்த நடிகரை தேடினேன். அப்போதுதான் நாகேசின் பேரனே நடிகராகும் முயற்சியில் இருக்கிறார். அதற்கான பயிற்சியில் இருக்கிறார் என்றார்கள். நாகேஷின் குடும்பத்தினர் அனைவருக்கும் கதை சொன்னேன். அவர்களுக்கு பிடித்திருந்தால் உடனே ஓகே சொல்லிவிட்டார்கள். பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. என்றார்.