மகத்தான மருத்துவ பயன்கள் கொண்ட வெட்டிவேர்.

விழல் வேர்,குரு வேர்,  வீரணம், இருவேலி என்றும் அழைப்படும் வெட்டிவேர் மகத்தான மருத்துவ பயன்கள் கொண்டதாகும். கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மனத்தையும் குளிர்சியையும் தரும்.மிக எளிய முறையில் இதை உபயோகப்படுத்தலாம்.

கோடைகாலத்தில் தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டுஅதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.

சருமம் மிருதுவாக:-
சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.
இந்த இரு பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.
பச்சைப்பயறு - 100 கிராம்
சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - 50 கிராம்
இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

பருக்கள் நீங்க....

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...
சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் - ஒரு டீஸ்பூன்
கொட்டை நீக்கிய கடுக்காய் - 1
இந்த இரண்டையும் முந்தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!

தழும்புகள் நீங்க....
பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும் அதற்கான நிவாரணம் இதோ...
ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.
இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.

வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.
வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும்.


கூந்தல் மணக்க....
அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
வெட்டிவேர் - 100 கிராம்
வெந்தயம் - 100 கிராம்
இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.
தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!