ஸ்ருதிஹாசன் கொடுத்த அதிர்ச்சி...

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணியில் இருக்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போதுள்ள நடிகைகள் பலரும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சரி சமமான புகழில் இருந்து வருகிறார்கள். நயன்தாரா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா ஆகியோர் தமிழிலும், தெலுங்கிலும் புகழ் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

இப்போது இவர்களுக்கிடையேதான் பலத்த போட்டி இருந்து வருகிறது. பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதில்தான் இவர்களுக்குள் அதிகமான போட்டி இருக்கிறது. அதிலும் ஒரு படம் ஹிட்டானவுடனே சம்பளத்தையும் ஏற்றி விடுகிறார்களாம். தொடர்ந்து வெற்றியைக் கொடுக்கும் ஹீரோயின்களுக்கு தயாரிப்பாளர்களும் ராசியானவர் என்று சொல்லி அவர்கள் கேட்கும் சம்பளத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.
தெலுங்கில் கிளாமராகவும், ராசியான நடிகையாகவும் இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் ஸ்ருதி. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியிருக்கிறார்கள். அவர் ஒண்ணேகால் கோடி ரூபாய் சம்பளமாக வேண்டும் என்று சொன்னாராம். முதலில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், அதன் பின் அவர் கேட்ட தொகைக்கு சம்மதம் சொன்னார்களாம். இதுதான் ஸ்ருதிஹாசனின் இதுவரையிலான அதிக சம்பளம் என டோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளதாம். ஸ்ருதியின் சம்பள விவகாரத்தைக் கேட்ட மற்ற போட்டியாளர்களுக்கு வெறும் அதிர்ச்சி மட்டுமல்ல பேரதிர்ச்சியே ஏற்பட்டுவிட்டதாம்.