படம் தயாரிக்கிறார் ரஜினி உதவியாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் ஜெயராமன். ரஜினி ஜெயராமன் என்றுதான் இவரை அழைப்பார்கள். அவர் இப்போது படத் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கிருமி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் மதயானைக்கூட்டம் கதிர் ஹீரோவாகவும், ரேஷ்மி மேனன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். அனுசரண் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

தனது படத் தயாரிப்பு பற்றி ரஜினி ஜெயராமன் கூறியதாவது: ரஜினி சார்க்கிட்ட 25 வருஷமா உதவியாளராக இருந்தேன். அவர் என்னை தன் குடும்பத்தில் ஒருத்தனா வச்சிக்கிட்டாரு. எனக்கும், என் குடும்பத்துக்கும் என்ன தேவையோ அதையெல்லாம் செய்து கொடுத்தார். அவர் செய்வதை வெளியில் சொல்வது அவருக்கு பிடிக்காது. அதனால் இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியாது.

அவர் உடம்புக்கு முடியாம சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில ட்டீட்மெண்ட் எடுத்துக்கிட்டு திரும்பியதுமே என்னைத்தான் முதலில் கூப்பிட்டு பார்த்தார். என்னை பார்த்ததுமே அவர் கண்கலங்கிடுச்சு. நானும் அழுதிட்டேன். "என்ன ஜெயராமா உன்னை பார்க்கறதுக்காவே திரும்பி வந்திட்டேன் பாரு"ன்னு கலகலன்னு சிரிச்சாரு.
அப்புறம் ஒரு நாள் அவர்கிட்ட போயி. நான் படம் தயாரிக்கப்போறதா சொன்னேன். கொஞ்ச நேரம் யோசிச்சவரு "சினிமா தயாரிக்கிறது நீ நினைக்கிற மாதிரி ஈசியா இருக்காது. கடின உழைப்பும், நிறைய கவனமும் தேவை பார்த்து செய்" என்று வாழ்த்தினார். அப்புறம் என்னுடன் இணைந்து தயாரிக்கிற நண்பர்களை ரஜினி சாருடன் போனில் பேச வைத்தேன். "ஜெயராமன் நல்ல மனுஷன். அவன் எது செய்தாலும் கரைக்டா செய்வான். அவனை பத்திரமா பார்த்துக்குங்க" என்றார்.
இப்போ படம் கிட்டத்தட்ட முடிஞ்சிடுக்கு. பாடல் ரெடியானதும் முதல் சி.டியை அவர் கையால கொடுத்து வாங்கணும்ங்ற ஆசையில இருக்கேன். படம் ரெடியானதும் அவர்கிட்ட போட்டு காட்டிவிட்டுத்தான் ரிலீஸ் பண்ணுவேன். லிங்கா ஷூட்டிங் முடிந்து திரும்பியதும் அவரை சந்தித்து இந்த ஆசைகளை சொல்லப்போறேன். என்கிறார். ரஜினி ஜெயராமன்.