ரகுவரனை பெருமைப்படுத்திய தனுஷ்!

தனுசுக்கு அப்பாவாக நடித்தவர்களில் ரகுவரன் குறிப்பிடத்தக்கவர். யாரடி நீ மோகினி படத்தில் அவர்களின் நடிப்பு பேசப்படும் வகையில் இருந்தது. குறிப்பாக, அப்பா-மகன் என்றாலும் ஒரே வீட்டிற்குள் எதிரும் புதிருமாக அவர்கள் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு எந்த காலத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். அந்த அளவுக்கு இயல்பாக இருந்தது.

அதோடு, ரகுவரனின் நடிப்புக்கு ஏற்கனவே ரசிகராக இருந்த தனுஷ், அந்த படத்தில் அவருடன் நடித்த பிறகு இன்னும் நெருக்கமான ரசிகராகி விட்டார். அதனால்தான், தற்போது தான் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில் தனது கேரக்டரின் பெயரை ரகுவரன் என்றே வைத்தாராம். பெரும்பாலும் முன்னாள் ஹீரோக்களின் பெயர்களையே இப்போதைய ரசிகர்கள் தங்கள் கேரக்டருக்கு வைத்து வரும் நிலையில் ஒரு வில்லன் நடிகரின் பெயரை தனுஷ் வைத்து நடித்திருப்பதை கோடம்பாக்கத்தில் அவரை பலரும் பெருமையாக பேசி வருகிறார்கள்.


இந்த நிலையில், ரகுவரனின் பெயரை மேலும் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தில் அவர் பெயரை தனக்கு வைத்து நடித்ததாக கூறியுள்ள தனுஷ், ஒரு காட்சியில் அண்ணாமலையில் ரஜினி, சரத்பாபுவைப்பார்த்து பேசுவதுபோல், இப்படத்தின் வில்லனைப்பார்த்து, ''அமுல் பேபி நீ இந்த ரகுவரனை இதுவரை வில்லனாத்தான் பார்த்திருக்கே, ஹீரோவாய் பார்த்ததில்லையே, இனிமே பார்ப்பே...'' என்று சவால் விடுவார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருப்பதால், ரகுவரனின் சாரின் பெயரை எனது கேரக்டருக்கு வைத்ததால்தான் இது சாத்தியமானது என்று கூறி வருகிறார் தனுஷ்.