ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட ஹீரோ...!

தெலுங்குத் திரையுலகின் முக்கியமான முன்னணி ஹீரோக்களில் ஒருவர் பவன் கல்யாண். இவர் நடித்து வெளிவந்த 'கப்பார் சிங்' படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. சென்ற வருடம் வெளிவந்த 'அத்தாரின்டிக்கி தாரேதி' படமும் மிகப் பெரிய வெற்றி பெற்று அவருடைய நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.

இதன் பின் பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் அரசியலில் குதித்ததால் சில மாதங்களாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.


தற்போது 'ஓ மை காட்' ஹிந்திப் படத்தின் ரீமேக்கான 'கோபாலா கோபாலா' படத்தில் 25 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறும் 'கிருஷ்ணர்' கதாபாத்திரத்தில் நடித்து வருகிறர். இதில் நடிப்பதற்காக அவர் 15 நாட்களுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். அதன் பின் தயாரிப்பாளர் பவன் கல்யாணிடம் பேசி அதே 15 கோடி ரூபாய் சம்பளத்தைத் தர சம்மதித்திருக்கிறார். ஆனால், 15 நாட்களுக்குப் பதிலாக 22 நாட்கள் நடித்துத் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பவன் கல்யாணும் சம்மதம் சொல்லிவிட்டாராம். டோலிவுட் வட்டாரத்தில் இந்த சம்பவள விவகாரம்தான் தற்போது சூடான விவாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.